Monday, October 19, 2009

இலஙகை அரசின் மறுப்பும் அமெரிக்க அறிஞர்களின் ஆதாரமும்

இலங்கை அரசு இளைஞர்களை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் மறுப்பு தெரிவித்த போதும் அந்த வீடியோ படத்தில் உண்மை தன்மை இருப்பது அமெரிக்க அறிஞர்களின் ஆராய்சியில் தெரிய வந்துள்ளது.



இலங்கை தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி, சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொள்ளும் நேரடிக்காட்சி ஒன்றினை, இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் சங்கம், பொதுமக்கள் பார்வைக்கு அண்மையில் வெளியிட்டிருந்தது.
இதனை Channel 4 ஊடகமும், தனது செய்தியின் ஊடாக வெளிக்கொணர்ந்து, சர்வதேசத்தின் பார்வைக்கு எடுத்து சென்றிருந்தது.

எனினும் இவ் ஒளிப்படக்காட்சிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பாலித கோஹன, இது ஒரு புனையப்பட்ட வீடியோ பதிவு எனவும், இதனை வெளியிட்ட தரப்பினரின் பெயரை தான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இக்காணொளி காட்சிகள் சம்பவம் தொடர்பில், இந்திய மத்திய அரசும், கருத்து தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணா, பி.பி.சி செய்திச்சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'இந்த விடயம் தொடர்பாக தாம் அதிக கரிசணை செலுத்து வருகிறார் என்றும், சம்பந்தப்பட்ட வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடமிருந்து இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அறிஞர்கள் அராயச்சி:
இலங்கை தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொளிக்காட்சிகளில், எவ்வித திரிபுகளும் இல்லை, அவை உண்மையானவை என அமெரிக்க
புலனாய்வு வல்லுனர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
பிரித்தானியாவின் 'சேனல் '4 ஊடகத்தின் மூலம் உலக வெளிச்சத்திற்கு வந்த இக்காணொளிக்காட்சிகள், சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்ற கொடூரத்திற்கு சிறந்த உதாரணமாக சர்வதேசத்திற்கு முன்வைக்கப்பட்ட போதும், இது போலியாக தயாரிக்கப்பட்டதொன்றென, சிறிலங்கா அரசு திட்டவட்டமாக மறுத்திருந்தது. தனது சார்பில் ஒரு குழுவொன்றை நியமித்து, இவ்வீடியோ காட்சிகள் சித்தரிக்கப்பட்டதொன்றெனவும், அறிக்கையும் வெளியிட்டது.

எனினும், ஐ.நா முதற்கொண்டு மனித உரிமை அமைப்புக்கள் வரை, இவ் அறிக்கையின் உண்மைத்தன்மை பற்றி கேள்வி எழுப்பின. அரசு நியமித்த குழுவில் இடம்பெற்றவர்கள் பலர், சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர்கள் என்பதுடன் அரசுக்கு ஆதரவாக செயற்படுவர்களாக இருப்பதால், அவர்கள் சுயாதீனமாக ஆராய்ந்திருக்க வாய்ப்பில்லை எனவும், அவை தெரிவித்தன.

இந்நிலையில், அமெரிக்க வல்லுனர்கள் ஒன்றினைந்து இவ்வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மை பற்றி ஆராய முடிவெடுத்தனர். அதன் பிரகாரம், தமது முதற்கட்ட அறிக்கையினை அவர்கள் வெளியிட்ட்டுள்ளனர்.

அவற்றில் 10 விடயங்கள், இவ்வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பதனை உறுதிப்படுத்தியுள்ளன.

  • வீடியோ அல்லது ஓடியோ பகுதியில் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை
  • சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது.
  • குருதி ஒட்சிசனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளமை அவர் பின்பு சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.
  • இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.
  • முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது போல உள்ளமை அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.
இக்குழுவினரின் இறுதி அறிக்கை நவம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. இவ்வீடியோ காட்சிகள் உண்மையென, சுயாதீனமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுமாயின், அவை சிறிலங்கா அரசினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மேலும் ஆதாரமாக அமையும் என நம்பப்படுகிறது.


No comments:

Post a Comment