Monday, October 19, 2009

ஈழத் தமிழர்களை மீட்க பிரசார பயணம்: ராமதாஸ், வைகோ, பாண்டியன், நெடுமாறன் பங்கேற்ப்பு


இலங்கையில் முள்வேலி முகாம்களில் இராணுவக் காவலில் சிறை வைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருந்து, சுகாதார வசதிகள் இல்லாமல் வதைக் கப்படும் ஈழத்தமிழர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களிடம் ஏற்படுத்துவதற்காக பரப்புரைப் பயணம் நடத்துவது என இலங் கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் நான்கு திசைகளிலிருந்தும் அக்டோபர் 27ந் தேதி தொடங்கும் இப்பயணம் திருச்சியில் அக்டோபர் 29ஆம் தேதி நிறைவடைகிறது. சென்னையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையில் தொடங்கும் பயணம் காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் வழியாகச் சென்று திருச்சியை அடைகிறது.
இராமேசுவரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில் தொடங்கும் பயணம் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் வழியாக திருச்சியை அடைகிறது.
குமரி முனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் தலைமையில் தொடங்கும் பயணம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் வழியாக திருச்சியை அடைகிறது.
உதக மண்டலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் தொடங்கும் பயணம் கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ் ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களின் வழியாக திருச்சியை அடைகிறது.
வழிநெடுக இருக்கும் ஊர்களில் மக்களிடையே பரப்புரைப் பயணம் செய்தவாறு செல்லும் இக்குழுவினர் இறுதியாக அக்டோபர் 29ஆம் தேதி யன்று மாலை திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் இணைந்து பேசுகிறார்கள்.பரப்புரை பயணக் குழுவினரின் விரிவான பயணத் திட்டம் பின்னர் அறிவிக்கப்படும். வழிநெடுக உள்ள ஊர்களில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடித் திட்டமிட்டு இப்பயணத்தை வெற்றிகரமாக நடத்த உதவும்படி வேண்டிக்கொள்ளப் படுகிறார்கள்.

தீர்மானங்கள்இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் 10-09-2009 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மரு. இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் நல்லகண்ணு, துணைச் செயலாளர் மகேந்திரன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தனிச்சிறைகளில் அடைக்கப்பட்டு பல ஆண்டு காலமாக வாடிவரும் ஈழத்தமிழ் அகதிகளில் எத்தகைய குற்றச்சாட்டோ வழக்குகளோ இல்லாதவர்களையும், நீதிமன்றங்களால் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களையும், பிணையிலிருந்து விடுதலை பெற்றவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகிறது.மற்றவர்கள் மீதுள்ள வழக்குகளை விரைவில் விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
2. இலங்கையில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் அவல நிலையைக் கண்டறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அனுப்ப வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் காங்கிரசுக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் கொண்ட குழுவை அனுப்ப இந்திய - தமிழக அரசுகள் முடிவு செய்திருப்பது நாடாளுமன்ற சனநாயக மரபுகளுக்கு எதிரானதாகும். நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அனுப்பினால் ஒழிய உண்மைகளைக் கண்டறிய முடியாது. காங்கிரசுக் கூட்டணியைச் சேர்ந்தவர்களை மட்டுமே கொண்ட ஒரு குழுவை அனுப்பியது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவிக்கிறது.


No comments:

Post a Comment